tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : மக்கள் விஞ்ஞானி மேக்நாத் சகா பிறந்தநாள்....

அது 1905-ம் ஆண்டு... டாக்காவில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அந்த பள்ளிக்கு வங்காள கவர்னர் வந்திருந்தார். அவர் ஒரு வெள்ளைக்கார துரை!

திடீர் என ஒரு மாணவர் பட்டாளம் வெள்ளைக்கார துரையின் கார் முன் தோன்றி “பிரிக்காதே! பிரிக்காதே! மக்களை மதத்தால் பிரிக்காதே! சுதந்திர தாகத்தை ஒடுக்காதே!” என முழக்கமிட்டது. இதனை பார்த்து வங்காள கவர்னர் அதிர்ச்சியடைந்தார்.
வெள்ளைக்கார கவர்னர் ஜெனரல் கர்சன் 1905-ம் ஆண்டு வங்காள மக்களின் விடு தலை உணர்வை ஒடுக்க வங்காளத்தை கிழக்கு வங்காளம், மேற்கு வங்காளம் என இரண்டாகப் பிரித்தார்.இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களை பள்ளி நிர்வாகம் பள்ளியை விட்டு நீக்கியது. அப்படி வெளியேற்றப்பட்ட சிறுவர்களில் ஒருவர் மேக்நாத் சாகா. பிற்காலத்தில் நவீன வானியற்பியலின் தந்தையாக உருவெடுத்தார்.

மேக்நாத் வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டையும், சாகா சமன்பாட்டையும் கண்டுபிடித்தார். இந்த பேரண்டம் பெருவெடிப்பு ஒன்றினால் உருவான ரகசியத்தை அறிய இவரது கோட்பாடே இன்று வழிசெய்துள்ளது. அதனால்தான் மேக்நாத் நவீன வானியற்பியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.தன் கண்டுபிடிப்புகளுக்காக மேக்நாத், நான்கு முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். காலணி ஆதிக்க எதிர்ப்பாளரான அவருக்குபரிசு வழங்கப்படவில்லை. ‘சாகா அணுக்கரு ஆய்வு நிறுவனம்’ உட்பட பல அறிவியல் ஆய்வு நிறுவனங்களை உருவாக்கினார். ‘சயின்ஸ் அண்டு கல்ச்சர்’ என்ற பத்திரிக்கையை நடத்தி அறிவியலைப் பரப்பினார். விஞ்ஞானி பி.சி.ராய், சத்யேந்திரநாத் போஸ், விடுதலைப் போராட்ட தலைவர்கள் சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு என பலரும் அவரது அறிவுக் கூர்மையை உணர்ந்து அவரிடம் நட்பு பாராட்டினர்.

அணு ஆராய்ச்சி மட்டும் அல்லாமல் வளிமண்டல ஆராய்ச்சி, வரலாறு, தொல்லியல், பொருளாதாரம், மனித உரிமை, அரசியல் என பல துறைகளில் மேக்நாத் சாகா செயல்பட்டார். ஒரு விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் மக்கள் நாயகனாகவும் விளங்கிய மேக்நாத் சாகா 1956-ம் ஆண்டு காலமானார்.

===பெரணமல்லூர் சேகரன்===